
டிசம்பர் 9, 2009
கோபன்ஹேகன்: மாநாடு துவக்க விபரங்கள்
கோபன்ஹேகன் மாநாட்டு அரங்கம்
காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா. ஏற்பாட்டில் நடக்கும் உலக மாநாடு டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த மாநாடு ஒரு சரித்திரத்தை எழுதும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் குறித்த விவகாரத்துக்கான தலைவரான யோவ் த ஃபோர் கூறியுள்ளார்.
இருந்தபோதிலும் அது சரியான சரித்திரத்தை படைக்க வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
புவி வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதில், உலக நாடுகள் இலட்சியகரமான இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கோபன்ஹேகனில் நடக்கவிருக்கின்ற இந்த இரு வார மாநாட்டில் காலநிலை மாற்றம் குறித்த புதிய உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு மாநாட்டுப் பிரதிநிதிகள் முயற்சிப்பார்கள்.
எட்டப்படக்கூடிய நிலையிலேயே உடன்படிக்கை இருப்பதாகவும், மனித குலத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று மாநாட்டு பிரதிநிதிகளிடம் உலகம் எதிர்ப்பார்த்து நிற்பதாகவும் மாநாட்டை நடத்தும் டென்மார்க் நாட்டின் பிரதமர் லார்ஸ் லொக ராஸ்முஸன் அங்கு பேசுகையில் குறிப்பிட்டார்.
மூலம்: http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/12/091209_summitstart.shtml
No comments:
Post a Comment